Sunday, 25 November 2012

காப்ஸிகம்  ரைஸ் ( குடமிளகாய் சாதம்)

 

தேவையான அளவு: 

1. சாதம் - 1 கப்

2. குடமிளகாய் - 1 (50  கிராம் )

3. வெங்காயம் - 1

4. பச்சைமிளகாய் - 1

5. பூண்டு - 10 பல்

6. இஞ்சி - சிறிய துண்டு

7. கடுகு - 1/4 தேக்கரண்டி (டீஸ்பூன்)

8. எண்ணை - தேவையான அளவு

9. உப்பு -  தேவைக்கேற்ப

 

செய்முறை:

வெங்காயம், குடமிளகாய்,  இஞ்சி, ஆகியவற்றை பொடியாக

நறுக்கிக்கொள்ளவும் . பச்சைமிளகாயை கீறிக்கொள்ளவும்.


கடாயில் என்னை விட்டு  கடுகு போட்டு தாளிக்கவும் . நறுக்கிய

வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். தோலுரித்த பூண்டு ,

பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை

வதக்கவும்.


பிறகு  பொடியாக நறுக்கிய குடமிளகாய் , உப்பு போட்டு நன்றாக

கலக்கவும்.  சிறிது நேரம் மூடி வைத்து பிறகு ஒன்றாக கலந்து

வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.


இந்த கலவையில் சூடான சாதத்தை போட்டு கலக்கவும்

காப்ஸிகம் ரைஸ் தயார் .





Friday, 16 November 2012

ஜிஞ்சர்  சூப்

தேவையான பொருட்கள் :


1. துருவிய இஞ்சி  - 1/4  கப்

2. துருவிய கேரட் , முட்டைகோஸ் ( கலந்தது )  - 1/2  கப்

3. கைக்குத்தல் அரிசி  -  3  மேஜைக்கரண்டி

4. மிளகுத்தூள்  - 1/ 2  மேஜைக்கரண்டி

5. சீரகத்தூள்  -  1/2  மேஜைக்கரண்டி

6. வெங்காயத்தாள்   - சிறிதளவு

7. எண்ணை   - 1  மேஜைக்கரண்டி

8. உப்பு - தேவையான அளவு

செய்முறை :


கைகுத்தல் அரிசியை  மிக்ஸ்யில்  போட்டு  சன்னமான ரவை போல்

அரைக்கவும்.  வெங்காயத்தாளை  பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.


கடாயில்  எண்ணை விட்டு  இஞ்சி,  கேரட்,  முட்டைகோஸ்  மூன்றையும் 

நன்கு வதக்கவும்.  பிறகு குக்கரில் அதை  கொட்டி  அத்துடன் 

கைக்குத்தல்அரிசி  ரவையை  போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி 

குக்கரை மூடவும் . ஒரு விசில் வந்ததும்  இறக்கி விடவும் .  சிறிது  நேரம் 

கழித்து  குக்கரை  திறந்தவுடன்  , மிளகுத்தூள்,  சீரகத்தூள்,  உப்பு சேர்த்து 

ஒரு  கொதி வைத்து  இறக்கி  வெங்காயத்தாளை போட்டு  இரண்டு

நிமிடம்   மூடிவிடவும்.



சாபிடுவதற்கு முன் சூப் சாப்பிடுவது நல்லது.  ஜிஞ்சர் சூப்   நல்ல பசியை தூண்டும் , 



வேப்பம்பூ  பொடி

தேவையான பொருட்கள் :


1. வேப்பம்பூ  -  1 ஆழாக்கு   (200கிராம்)

2. தனியா  - 1/4  ஆழாக்கு (50 கிராம்)

3. மிளகு - 1/2  தேக்கரண்டி ( டீஸ்பூன் )

4. மிளகாய் வற்றல்   - 4 அல்லது 5

5. பெருங்காயம்   -  1/4  தேக்கரண்டி

6. உப்பு - தேவையான அளவு

செய்முறை :


வேப்பம்பூவை  சிவக்க வறுக்கவும்  .  தனியா , மிளகு ,  மிளகாய்

வற்றல் ,  பெருங்காயம்  ஆகியவற்றையும்  வறுக்கவும் .  பிறகு

எல்லாவற்றையும் சேர்த்து  , உப்பு போட்டு , மிக்ஸ்யில்  அரைத்தால்... 

வேப்பம்பூ   பொடி   தயார்.


சாதத்தில்  பசுநெய் விட்டு , தேவையான அளவு வேப்பம்பூ பொடியை 

சேர்த்து  கலந்து சாப்பிட்டால்  மிகவும் ருசியாக இருக்கும்.


சர்க்கரை நோய் உள்ளவர்கள்   வாரம் ஒருமுறை  வேப்பம்பூ பொடி  

உணவில் சேர்த்து கொள்வது நல்லது. 

உணவில் அறுசுவையும் இருக்க வேண்டும் கசப்பும் ஒரு சுவைதான் 

அது   உடலுக்கு அதிக நன்மையை அளிக்கவல்லது.









முளைக்கட்டிய முப்பயறு அடை

 

தேவையான பொருட்கள் :


1. முளைக்கட்டிய பச்சைப்பயறு - 1/2 கப்

2. முளைக்கட்டிய கொள்ளு - 1/2 கப்

3. முளைக்கட்டிய தட்டைப்பயறு  - 1/2 கப்

4. பச்சரிசி மாவு  - 1/2 கப்

5. மசித்த உருளைக்கிழங்கு  - 1/2 கப்

6. உருவிய முருங்கைக்கீரை  - 1/2 கப்

7. நறுக்கிய  வெங்காயம்  -1 கப்

8. பச்சை மிளகாய் - 3   பொடியாக   நறுக்கிக்கொள்ளவும்

9. காய்ந்த மிளகாய்  - 3  கிள்ளிக்கொள்ளவும்

10. சோம்பு  -  2  தேக்கரண்டி (டீஸ்பூன் )

11. தேங்காய் துருவல்  -  1/2 கப்

12. பெருங்காயம்  - 1 சிட்டிகை

13. எண்ணை  அல்லது   பசுநெய்   - தேவையான அளவு

14. உப்பு - தேவையான அளவு


செய்முறை :

மூன்று பயறுகளையும்  பன்னிரெண்டு மணி நேரம் ஊற வைத்து ,

தண்ணீரை வடிகட்டி  மீண்டும் பன்னிரெண்டு மணி நேரம் முளைக்கட்ட

விடவும்.


பிறகு  நன்றாக முளைக்கட்டிய மூன்று பயறுகளையும் எடுத்து , உப்பு,

சோம்பு , சேர்த்து கரகரப்பாக  அரைக்கவும்.


அரைத்த மாவுடன்   பச்சரிசி மாவு,  மசித்த உருளைக்கிழங்கு , 

முருங்கைக்கீரை ,  வெங்காயம்  , பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் ,

தேங்காய் துருவல் ஆகியவற்றை கலந்து  அடை மாவு  பதத்துக்கு 

கரைக்கவும்.


அடுப்பில் தோசைக்கல்  வைத்து  காய்ந்ததும்   மாவை  ஊற்றி  எண்ணை

விட்டு , இருபுறமும் வேக வைத்து   எடுக்கவும்

சூடான அடை மேல்  வெண்ணெய்  போட்டும் சாப்பிடலாம்.



ஊட்டசத்து மிக்க உணவான இது உடலுக்கு பலத்தையும், 

ஆரோக்யத்தையும் கொடுக்க கூடியது . எளிதில் ஜீரணமாவதால்  

வயதானவர்களும் சாப்பிடலாம்.

























Monday, 12 November 2012

தண்டுகீரைப்   பொரியல்:

தேவையான பொருட்கள்:

1. தண்டுகீரை  -   1 கட்டு 

2. தேங்காய் துருவல் -   3 மேஜைக்கரண்டி 

3. பெரிய வெங்காயம்  -  ஒன்று  (பொடியாக நறுக்கவும் )

4. மிளகுத்தூள்  -   1/4  மேஜைக்கரண்டி 

5. பெருங்காயத்தூள்  -   சிறிதளவு 

6. உப்பு -   தேவையான அளவு 

தாளிக்க :
கடுகு , உளுத்தம்பருப்பு - தலா கால் மேஜைக்கரண்டி , 
காய்ந்த மிளகாய்  - 2,   எண்ணை - தேவையான  அளவு .

செய்முறை:

 தண்டுக்கீரையை  ஆய்ந்து ,  தண்டை  நார் நீக்கிப்  பொடியாக  நறுக்கி  தண்ணீரில் அலசவும்.  

 

கடாயில் எண்ணை  விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு,  காய்ந்த  மிளகாய்  தாளித்து , வெங்காயத்தை  போட்டு  வதக்கவும்.  அதில் நறுக்கிய  கீரைத்தண்டைப்  போட்டு,  பெருங்காயத்தூள் , உப்பு சேர்த்து  லேசாகத் தண்ணீர் தெளித்து  மூடி  வைத்து, வேக  விடவும் .

 

அடுப்பில்  இருந்து  இறக்கும்  முன்  மிளகுத்தூள், தேங்காய்  துருவல் போட்டுக்  கிளறி இறக்கவும் .

 தண்டுக்கீரையில்  இரும்புச்சத்து அதிகம் உள்ளது .

 







கொள்ளு  பொடி :

தேவையான பொருட்கள் :


1. கொள்ளு பயறு -  100  கிராம் 

2. மிளகு -  ஒரு தேக்கரண்டி 

3. காய்ந்த மிளகாய்  - 4 

4. உளுத்தம்பருப்பு  - 4 தேக்கரண்டி 

5. பெருங்காயத்தூள்  - சிறிதளவு 

6. உப்பு - தேவையான அளவு 


செய்முறை :

கடாயில்  கொள்ளு  பயறை  தனியாக  வறுத்துக்கொள்ளவும்.

மிளகு, காய்ந்த மிளகாய் , உளுத்தம்பருப்பு  ஆகியவற்றை 

 தனி தனியாக  வறுத்துக்  கொள்ளவும்.

 

இவை  எல்லாவற்றையும்  கலந்து  மிக்ஸ்யில்  நன்கு 

 பொடித்து , பெருங்காயத்தூள், உப்பு  சேர்த்துக்  கலக்கவும்.

 

சாதத்தில்  இந்த பொடியை  போட்டு  சிறிது பசுநெய்  விட்டு 

சாப்பிட்டால்  மிகவும் ருசியாக இருக்கும்.


இந்த பொடி , கொலஸ்ட்ராலைக்  குறைக்கவும், இடுபெலும்பை வலுப்படுத்தவும்  பயன்படுகிறது.




Sunday, 11 November 2012

தூதுவளை தோசை:

தேவையான பொருட்கள்:


1. புழுங்கலரிசி -  1 கப்

2. தூதுவளை இலை - 15

3. மிளகு - 10

4. சீரகம் - 1/2 தேக்கரண்டி

5. பச்சை மிளகாய்  - 2

6. உப்பு - தேவைக்கேற்ப

7. எண்ணை + பசுநெய் - தேவையான அளவு.

செய்முறை:


புழுங்கலரிசியை 3 மணி நேரம் ஊற வைத்து பின் மிக்ஸ்யிலோ அல்லது ஆட்டுகல்லிலோ பச்சை மிளகாய், மிளகு சீரகம், தூதுவளை இலை உப்பு சேர்த்து நன்றாக ஆட்டவும்.

பின்னர் தோசைக்கல்லில் இந்த மாவை மிக  மெல்லிய ஊத்தப்பம் போல ஊற்றி பசுநெய் + எண்ணையைக்  கலந்து அதை, சுற்றிவர ஊற்றி,  திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும். 

மார்பில் சளிக்கட்டியிருந்தால் அதை குணப்படுத்தும் தன்மை உள்ளது இந்த தோசை.  ஆனால் சூடாக சாப்பிட்டால்தான் சுவை.




 

கேழ்வரகு தோசை :


தேவையான பொருட்கள்:


1. கேழ்வரகு மாவு - 1 கப்

2. ஆட்டிய  உளுத்தம்பருப்பு மாவு - 1/2 கப்

3. சிறிய வெங்காயம் - 15

4. பச்சை மிளகாய்  - 2

5. சீரகம் - 1/2 தேக்கரண்டி

6. எண்ணை - தேவையான அளவு


செய்முறை:


கேழ்வரகு மாவு, உளுத்தமாவு, உப்பு  ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து மறுநாள் வரை பொங்க விடவும்.(அதாவது 12 மணி நேரம்).

வெங்காயத்தை பொடியாகவும், பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கவும்.

மறுநாள் காலையில் மாவை நன்றாக கலக்கி விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து, சீரகத்தையும்  அரைத்து  மாவில்  போடவும்.

தோசைக்கல்லை  காயவைத்து  மெல்லிய  தோசைகளாக  ஊற்றி  சூடாக  இருக்கும்போதே  பரிமாறவும். இதற்கு  காரச் சட்னி ஏற்ற ஜோடி .













கம்பு தோசை :


தேவையான பொருட்கள் :


1. புழுங்கலரிசி - 1 கப்

2. கம்பு  - 1 கப்

3. சிறிய வெங்காயம்  - 15

4. பச்சைமிளகாய்  - 2

5. சீரகம் - 1 டீஸ்பூன்

6. உப்பு - சுவைக்கேற்ப

7. நல்லெண்ணெய் - தேவையான அளவு

8. கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

கம்பையும் , அரிசியையும் ஒன்றாக ஊறவிடுங்கள். வெங்காயத்தை உரித்து வைத்துக்கொள்ளுங்கள் .  அரிசி, கம்பு கலவை நன்கு ஊறியதும், வெங்காயம், பச்சைமிளகாய், சீரகம், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்தெடுங்கள். உப்பு சேர்த்து கலந்து,      2 மணி நேரம் புளிக்கவையுங்கள் . பின்னர் மெல்லியதாகவோ, கனமாகவோ தோசையாக ஊற்றி எடுங்கள். மணமும், சுவையும் நன்றாக இருக்கும்.

வெங்காய சட்னி , தக்காளி சட்னி  இதற்கு சிறந்த சைட் டிஷ்


சர்க்கரை வியாதி உள்ளவர்களும் மற்றவர்களும் இதை காலை உணவாக எடுத்துக்  கொள்ளலாம்.




சத்துமாவு சப்பாத்தி :


தேவையான பொருட்கள் :


1. கோதுமை  - 2 கிலோ

2. சோளம் - 1/4 கிலோ

3. கேழ்வரகு  - 1/4 கிலோ

4. கறுப்பு  உளுந்து - 1/4 கிலோ 

5. உப்பு - தேவையான அளவு 

6. நல்லெண்ணெய்  - தேவையான அளவு 


செய்முறை : 

கோதுமையையும் , மற்ற தானிய வகைகளையும் ஒன்றாகக் கலந்து

வெயிலில் உலர்த்துங்கள். பிறகு அவற்றை மிஷினில் கொடுத்து

மாவாக அரைத்துக்  கொள்ளுங்கள்.


தேவையானபோது  , இந்த மாவிலிருந்து ஒரு கப் அளவு எடுத்து, உப்பு

சேர்த்து சப்பாத்தி மாவைப் போலப்  பிசைந்து கொள்ளுங்கள் .


சிறு சிறு  சப்பாத்திகளாக தேய்த்து , தோசைக்கல்லில் போட்டு 

சுட்டெடுங்கள் .


சர்க்கரை வியாதி உள்ளவர்கள் முதல் அனைவரும் விரும்பி உண்ண ஏற்றது.





முளைப்பயிறு பப்பாளிக்காய் சாலட்

 

தேவையான பொருட்கள் :


1. முளைவிட்ட பாசிபயிறு - 1/2 கப்

2. கேரட்  - 1

3. சிறிய பப்பாளிக்காய்  - பாதி

4. மல்லித்தழை  - சிறிது

5. மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

6. எழுமிசைப்பழச் சாறு  - 1 மேஜைக்கரண்டி

7. உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை :

கேரட், பப்பாளிக்காயை தோல்  சீவி, துருவிக் கொள்ளுங்கள்.

முளைப்பயிரை   ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து சுவைக்கேற்ப  உப்பு  மிளகு தூள்

சேர்த்து பரிமாறுங்கள் .


எளிதில் ஜீரணமாகும் , காலை உணவுக்கு ஏற்றது . சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு  சிறந்த உணவு .

Friday, 2 November 2012

கேரட் மாங்காய் சாதம் (carrot mango rice )

தேவையான பொருட்கள்:

1. கேரட் - 100 கிராம்

2. மாங்காய் - 100 கிராம்

3. அரிசி  - 1 ஆழாக்கு  (2 கப் )

4. நல்லெண்ணெய்  -  4  மேஜைக்கரண்டி

5. கடுகு - 1/2 தேக்கரண்டி

6. கடலைப்பருப்பு  - 1 தேக்கரண்டி

7. உளுத்தம்பருப்பு  - 1 தேக்கரண்டி

8. காய்ந்த  மிளகாய்  - 4

9. பச்சை மிளகாய்  - 1

10. பெருங்கயத்தூள்  - 1 சிட்டிகை

11. மஞ்சள் தூள்  - 1 சிட்டிகை

12. கறிவேப்பிலை  சிறிதளவு

13. உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

அரிசியை கழுவி வேக வைத்து சாதம் உதிரி உதிரியாக இருக்கும்படி

வடித்துக்கொள்ளவேண்டும்.  குக்கரிலும் செய்யலாம்.


கேரட் மற்றும் மாங்காயை துருவிக்கொள்ளவும்.  வெங்காயத்தை

பொடியாக நறுக்கிக்கொள்ளவும் .


அடுப்பில்  வாணலியை வைத்து காய்ந்ததும் நல்லெண்ணெய் இரண்டு

மேஜைக்கரண்டி விடவும்.  கடுகு,கடலைப்பருப்பு,, உளுத்தம்பருப்பு,  போட்டு

தாளிக்கவும். கொஞ்சம் சிவந்ததும் , காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய்,

பெருங்காயத்தூள்  1 சிட்டிகை, மஞ்சள் தூள் 1 சிட்டிகை  போட்டு வதக்கவும்,

பிறகு வெங்காயம், கறிவேப்பிலையை  கொட்டி சிறிது நேரம் வதக்கவும்,

வெங்காயம் வதங்கியதும் கேரட், மற்றும், மாங்காயை போட்டு கிளறவும்.

இரண்டு நிமிடம் மூடி வைத்து பிறகு இறக்கவும்.


சாதத்தை ஒரு பேசினில் கொட்டி  கேரட், மாங்காய்  கலவையை அதில்

கொட்டி, தேவையான அளவு  உப்பு  சேர்த்து நன்கு கிளறவும்.


குழைதைகளுக்கு மிகவும் பிடிக்கும்.  புளிப்பு, காரம், இனிப்பு, உவர்ப்பு என

அனைத்து சுவையும் கலந்த சாதமாக இது இருக்கும்

கருவுற்ற பெண்களுக்கு பிடித்த உணவாக இது அமையும்.